ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, March 22, 2018

வான் மழை தந்த தண்ணீரே! - சிறுவர் பாடல்!



வான் மழை தந்த தண்ணீரே!
வராமல் போனால் கண்ணீரே!
ஊனைக் காப்பது தண்ணீரே
உடலில் ஓடுது செந்நீரே!

உயிரைத் தருவது தண்ணீரே!
உடலில் எழுபது சதம் நீரே!
பயிரைக் காப்பது தண்ணீரே!
பசியைப் போக்குது உன் நீரே!

குடிக்கத் தேவை தண்ணீரே!
குறுநாவில் ஊறுது உமிழ்நீரே!
குளிக்கத் தேவை தண்ணீரே!
கிராமத்திலிருக்கு குளம் நீரே!

சுனையில் பிறக்கும் தண்ணீரே
அருவியாய் விழுவது உன் நீரே!
ஆறாய் ஓடும் தண்ணீரே!
கடலில் கலப்பது உன் நீரே!

குடிநீரை தினமும் சேமிப்பீரே
உயிர் நீர் என்று உணர்வீரே!
நீரின்றி அமையா உலகென்ற
வள்ளுவன் சொல்லைக் காப்பீரே!





Wednesday, March 21, 2018

எங்கும் இல்லை! - உலக கவிதை தின சிறப்புக் கவிதை!


உலகில் அன்னையைப் போலொரு
அணைக்கும் கவிதை எங்கும் இல்லை!
கலியில் தந்தையைப் போலொரு
வணங்கும் கவிதை எங்கும் இல்லை!

அழுகையில் அக்காவினைப் போலொரு
துடைக்கும் கவிதை எங்கும் இல்லை!
விழுகையில் அண்ணனைப் போலொரு
தாங்கும் கவிதை எங்கும் இல்லை!

அறிவினில் ஆசிரியனைப் போலொரு
வாள்தரும் கவிதை எங்கும் இல்லை!
உறவினில் நண்பனைப் போலொரு
தோள்தரும் கவிதை எங்கும் இல்லை!

அழகில் காதலியைப் போலொரு
மயக்கும் கவிதை எங்கும் இல்லை!
பொழுதில் மனைவியைப் போலொரு
முயக்கும் கவிதை எங்கும் இல்லை!

கொஞ்சும் மழலையைப் போலொரு
சுவைதரு கவிதை எங்கும் இல்லை!
கொஞ்சும் தமிழினைப் போலொரு
மொழிதரு கவிதை எங்கும் இல்லை!

விஞ்சும் உறவுகளைப் போலொரு
வில்லங்கக் கவிதை எங்கும் இல்லை!
அஞ்சும் மரணத்தைப் போலொரு
ஆழ்துயில் கவிதை எங்கும் இல்லை!

(உலக கவிதைகள் தினத்திற்காக இன்று காலை அவசர அவரசமாகக் கிறுக்கியது)